ஆசிரியர்களுக்கு தொந்தரவு தந்தால் டிசி கொடுத்துருவோம் - மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்!
Posted on 10/05/2022
கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஆசிரியரை ஆபாசமாக பேசி தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பல வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 'தமிழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC, Conduct Certificate-ல் எந்த காரணத்துக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். எனவே, ஆசிரியர்களிடம் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள கூடாது.
ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களின் சான்றிதழ்களில் ஒழுங்கீனமானவர் எனக் குறிப்பிடப்படும் என கூறிய அவர், மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என்றும் செல்போன் எடுத்து வருவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், வரும் கல்வி ஆண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை நடத்திவிட்ட பின்னரே பாடங்கள் நடத்தப்படும்' என்று கூறினார்.
Tags: News