அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளதால் வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற சூரியமூர்த்தியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி எஸ்.சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இணைந்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிராக்கரிப்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
 
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
அவர் தனது மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்,  2017 ல் கட்சியின் விதிகளுக்கு முரணாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டு எந்த ஆவணத்தையோ, கடிதத்தையோ தேர்தல் ஆணையம் கட்சிக்கு தரவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 
அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை. சிவில் நீதிமன்றத்திற்குத்தான் உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக கட்சி தொடர்பான வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர்,
 
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை எனவும்,  அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்று எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.
 
மேலும், விதிமுறைகளுக்க முரணாக ஜூன் 23ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் சூரியமூர்த்தி கோரியிருந்தார்.
 
இந்த மனு நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது.
 
இந்நிலையில், அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாள எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து நிராகரிப்பு மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுதாரர் சூரியமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லாததால் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்பதால் மனுவை நிராகரிக்கக்கோரி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
 
மனுதாரர் தரப்பில் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளதால் வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என முன் வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, வழக்கு குறித்து சூரியமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். மேலும், அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்த தடை விதிக்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top