அரையாண்டு தேர்வு ரத்து - மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்
Posted on 09/12/2020
பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் அரையாண்டு தேர்வும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பிற மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வையும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டது. பள்ளிகள் திறக்க தாமதமாவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் அரசுப் பள்ளிகளில் நடத்தப்படவில்லை. ஆனால் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளை நடத்தின. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் நிலையில் இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வை ரத்து செய்வதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதற்கு அரசு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது. மாணவர்களும், பெற்றோர்களும் கூறும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார். இதனால் இம்மாத இறுதியில் வெளியாக உள்ள அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பிலோ, அல்லது அதற்கு முன்பாகவோ பள்ளிகள் திறப்பு குறித்த தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.