மத்திய அமைச்சரின் உத்தரவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!
Posted on 12/08/2022
அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக அறிவித்து மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டிருக்கும் உத்தரவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 1197 சதுர கி.மீ பரப்பளவு உள்ள அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், ஆனைமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் என மொத்தம் 4 யானை காப்பகங்கள் இருக்கின்றன. இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக அகஸ்தியர் மலை அமைகிறது. இதுகுறீத்த உத்தரவை, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சரின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ உலக யானைகள் நாளில், தமிழ்நாட்டின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியமலை அறிவிக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
கானுயிர்ச் சூழலமைப்புகளின் சமநிலையைப் பேணுவதில் யானைகள் மிக முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. இயற்கையின் கொடையான இந்த மிடுக்குமிகு பாலூட்டிகளை எவ்விலை கொடுத்தேனும் நாம் பாதுகாக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
Tags: News