ஜம்மு காஷ்மீர் ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதல்!
Posted on 11/08/2022
இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்ட இரு பயங்கரவாதிகளை ராணுவத்தினர் எதிர் தாக்குதல் நடத்தி சுட்டு வீழ்த்தியுள்ளனர். சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபில் மேன் மனோஜ் குமார், ரைபில் மேன் லக்ஷ்மணன் ஆகியோர் உயிரிழந்த ராணுவ வீரர்கள் ஆவர். இதில், லஷ்மணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவர். இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், பார்கல் பகுதியில் உள்ள ராணுவ முகாமின் தடுப்பு வேலியை தாண்டி செல்ல சில பயங்கரவாதிகள் முயற்சித்துள்ளனர். அதை கண்டுகொண்ட ராணுவ வீரர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். இரு தரப்பும் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் மூவர் வீரமரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில் இரு பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் உயிரிழந்த குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார். படுகாயம் அடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் நோக்கில் இது போன்ற செயல்களை பாகிஸ்தான் உதவியோடு பயங்கரவாதிகள் மேற்கொள்வதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சில நாள்களுக்கு முன்பு புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்திய சோதனையில் 25 கிலோ வெடிபொருள் பிடிபட்டது. இதன் மூலம் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் தடுக்கப்பட்ட நிலையில், பிடிபட்ட வெடிபொருளை பத்திரமாக ராணுவ வீரர்கள் வெடிக்க வைத்தனர்.
Tags: News