ரஜினியின் புதிய கட்சிக்கு மேற்பார்வையாளர்கள் நியமனம்!
Posted on 10/12/2020
எவ்வளவு சீக்கிரம் எனது முடிவை அறிவிக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் எனது முடிவை அறிவிப்பேன் என்ற ரஜினி, ஜனவரியில் கட்சித் துவங்கப்போவதாகவும், அதன் தேதியை டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, செய்தியாளர்களை சந்தித்த அவர், “சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் கட்சி ஆரம்பிது போட்டியிடுவேன் என்று அறிவித்து இருந்தேன் அதே போல் கட்சி ஆரம்பிப்பேன். என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி தோல்வி என்றால் அது மக்களுடைய தோல்வி” என்றார்.
ரஜினியின் அரசியல் வருகை குறித்த திட்டவட்ட அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே, ரஜினி தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி ஆகியோரை ரஜினிகாந்த் நியமித்துள்ளார்.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், புதிதாக தொடங்கவிருக்கும் கட்சிப் பணிகள் குறித்தும், கட்சியின் நிர்வாகிகள் தேர்வு மற்றும் கட்சியை பதிவு செய்வது குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகளையும் ரஜினி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.