ஆனந்த யாழின் மூலம் மக்களின் மனதில் வாழும் நா. முத்துக்குமார்
Posted on 12/07/2017
தமிழ் திரையுலகின் முன்னணி பாடல் ஆசிரியராக இருந்து வந்தவர் நா. முத்துக்குமார். காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தில் பிறந்த நா. முத்துக்குமாருக்கு சிறு வயதில் இருந்தே எழுதுவதில் நாட்டம் அதிகம். திரையுலகில் நுழைந்த அவர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டு பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆனார். மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 41 வயதில் சென்றுவிட்டாயே என்று அவரது நண்பர்கள் கதறி அழுதனர். இன்று அவரின் 42வது பிறந்தநாள் ஆகும். நா. முத்துக்குமார் மறைந்தாலும் அவர் எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாதவை.
இயக்குனரின் ராமின் தங்கமீன்கள் படத்தில் வந்த ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடலை யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாது. அந்த பாடலுக்காக முத்துக்குமாருக்கு சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது கிடைத்தது. சைவம் படத்தில் வந்த அழகே அழகே பாடலுக்காக முத்துக்குமாருக்கு இரண்டாவது முறையாக சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது கிடைத்தது.
வெயில் படத்தில் வந்த பாடலான வெயிலோடு விளையாடி பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனது. கஜினி படத்தில் வந்த சுட்டும் விழிச்சுடரே பாடலை திருப்பித் திருப்பிக் கேட்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அது பிரபலம். முத்துக்குமாரின் வரிகளை அனைவரும் ரசித்து ரசித்து கேட்டனர். அங்காடித் தெரு படத்தில் வந்த அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடலை இளசுகள் எல்லாம் தங்களுக்கு பிடித்த பெண்களை நினைத்து பாடினார்கள்.
Tags: News, Hero, Star