சொத்து வரி உயர்வு; அதிமுக, பாஜக, அமமுக போராட்டம்
Posted on 05/04/2022
சொத்து வரி உயர்வைக் கண்டித்து பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் சொத்து வரியை உயர்த்தி சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சொத்து வரியை உயர்த்தினால்தான் நிதி தருவோம் என மத்திய அரசு நிபந்தனை விதித்ததால் உயர்த்தினோம் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று போராட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கின்றனர்.
இதேபோல சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி, 21 மாநகராட்சிகளிலும் வரும் 8-ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். சென்னையில், சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, அமமுக சார்பில் வரும் 10ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தெருமுனை கண்டன கூட்டங்கள் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இந்தக் கண்டன கூட்டங்கள் 10-ம் தேதி தொடங்கி தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: News