பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!
Posted on 23/03/2021
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
நேற்று, பாஜக சார்பில் புன்னம் சத்திரம் பகுதியில் அண்ணாமலை உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கனிமொழி பரப்புரையை முடித்துக் கொண்டு சென்ற பிறகு திமுகவினர் பாஜகவை சேர்ந்த வாகன ஓட்டுனர் பாலமுருகன் மற்றும் கார்த்தி என்பவரை தாக்கியதாகக் கூறப்படுகின்றது.
இதையடுத்து தாக்குதலுக்கு உள்ளான இருவரும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவு பாஜக வேட்பாளர் அண்ணாமலை தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இருவரையும் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுகவினர் தொடர்ந்து வன்முறையை கடைபிடித்து வந்தால் பாஜகவினர் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும். திமுக தொடர்ந்து வன்முறையை கடைபிடித்து வருகின்றது, என்று கூறினார்.