நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் - வைகோ!
Posted on 16/07/2022
நீட் தோல்வி பயத்தால் அரியலூர் மாணவி நிஷாந்தினி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மறைந்த மாணவிக்கு வைகோ மற்றும் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து, தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் இரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகள் நிஷாந்தினி, நாளை நடைபெற இருக்கும் ‘நீட்’ தேர்வுக்காக தயாராகி வந்த நிலையில், தோல்வி பயம் காரணமாக இன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ‘நீட்’ தோல்வி பயம் காரணமாக தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. ‘நீட்’ தேர்வு நடத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் பரிந்துரைக்கு இரண்டு முறை அனுப்பப்பட்டும் பயன் இல்லை. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ விலக்கு சட்ட முன்வரைவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்துகின்றேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.வும் மாணவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அரியலூரில் மாணவி நிஷாந்தினி பிளஸ் 2 தேர்வில் 529.5 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்நிலையில் தோல்வி பயத்தால் மாணவி நிஷாந்தினி இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். மருத்துவக் கனவு தகர்ந்து போனதால் தனது உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி நிஷாந்தினி மறைவு பெரும் துயரத்தை தருகிறது.
எத்தனைப் பேர் செத்தாலும் நீட் எனும் அரக்கனை தொடர்வோம் என பிடிவாதம் பிடிக்கிறது மத்திய அரசு. மாநில அரசும் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு இன்னும் கூடுதல் முயற்சியை துரிதமாக செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
Tags: News