என் உயிருக்கு ஆபத்து - மதுரை ஆதீனம் கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்
Posted on 05/05/2022
எங்கள் ஆட்சியை பொறுத்தவரை அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பவர் தமிழக முதல்வர் என்றுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.
என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன் என்று மதுரை ஆதினம் கருத்திற்கு அமைச்சர் சேகர் பாபு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சிக்கு பதில் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்து நடந்த பகுதியையும், அப்பர் மடத்தினை மதுரை ஆதினம் ஆதீனம் பார்வையிட்டு மெளன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதீனத்திற்கு சொந்தமான இந்தக் கோயில்களின் சொத்துக்களை வைத்துக் கொண்டு ஆளும் கட்சியினர் மிரட்டுவதாகவும், குத்தகை தொகையை தர முடியாது என மிரட்டுகிறார்கள். உன்னால் திருப்பணி செய்ய முடியுமா, ஊருக்குள் நுழைய முடியுமா என ஆளும் கட்சியினர் மிரட்டுகிறார்கள்.
என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாரதப் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட உள்ளேன். கஞ்சனூரில் என்ன பிரச்சனை இருந்தாலும், கவலை இல்லை. எங்களுக்கு கோவிலுக்கு நான் செல்கிறேன். இவர்கள் என்ன தடுக்க முடியும் என அவர் தெரிவித்தார். மேலும் மதசார்பற்ற நாடு என கூறிக்கொண்டு, ஒரு மதத்ததிற்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது நல்லதல்ல. ஒரு மதத்தை அழித்து விடலாம் என நினைக்கிறார்களா, அது வெள்ளைக்காரனால் கூட முடியவில்லை, இவர்களால் என்ன செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரை ஆதினம் கருத்து தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரேத்யேக பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, எங்கள் ஆட்சியை பொறுத்தவரை அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பவர் தமிழக முதல்வர். இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு கொண்டு வந்த உடன் இந்த பிரச்னையில் யாருக்கும் பாதகம் இல்லாமல் சுமூகமாக முடிக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. திமுக-வை சேர்ந்தவர்கள் யாரும் மிரட்டல் சம்பவத்தில் ஈடுபடமாட்டார்கள். ஒரு வேளை தங்களை முன்னிலைப்படுத்தி கொள்ள இதுப்போன்று செயல்படுகிறார்களா என்று தெரியவில்லை. யாருக்கும் எந்த பிரச்சனை இல்லாமல் முதல்வர் பார்த்து கொள்வார் என்று தெரிவித்தார்.
Tags: News