2 மத்திய அமைச்சர்கள் ஒரே நாளில் ராஜினாமா!
Posted on 07/07/2022
மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி. சிங் ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். அவர்களது பொறுப்புகள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. அவர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வாகவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
முக்தார் அப்பாஸ் நக்வியின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு உள்ள 395 நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் இரு இஸ்லாமியர் கூட இல்லாத சூழல் எழுந்துள்ளது.
மேலும், மத்திய எஃகுத் துறை அமைச்சர் ஆர்.சி.பி. சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருவரது ராஜினாமாவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.
இதில், முக்தர் அப்பாஸ் நக்வி குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனயாகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தவிர்த்து கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோரது பெயர்களும் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கு சிறுபான்மையினர் நல அமைச்சகமும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு எஃகு அமைச்சகமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
Tags: News