சோனியா, ராகுல் காந்திக்கு 25 ஆண்டுகள் சிறை கிடைக்கும் - சுப்பிரமணியன் சுவாமி!
Posted on 15/06/2022
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு 20 முதல் 25 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு 20 முதல் 25 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம், நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு தொடங்கப்பட்டது. இந்தநிறுவனத்தை நடத்த ரூ.90 கோடியை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் நேஷனல் ஹெரால்ட் நிறுவனம் நஷ்டப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு நாளேடு நிறுத்தப்பட்டது. பின்னர் 2016ம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்ட் நாளேடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டபோது, அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களின் ஒப்புதல்களைப் பெறவில்லை. இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடமும், 24 % பங்குகள் ராகுல் காந்தியிடமும் உள்ளன.
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள அசோசியேட்டட் ஜர்னல் பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பப்பட்டது.
இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, திங்கள்கிழமையும், செவ்வாய்கிழமையும் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு நேரில் ஆஜராகினார். ராகுல் காந்தியிடம் நேற்று முன்தினம் 10 மணிநேரமும், நேற்று 8.30 மணிநேரமும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ராகுல் காந்தியிடம் 3-வது நாளாக இன்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தச் சூழலில் நேஷனல் ஹெரால்டு வழக்கை தொடர்ந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நவ்பாரத் சேனலுக்குப் பேட்டியளித்தார். அப்போது ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் “ ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவருக்கும் வேறு வழியில்லை விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவு தண்டனை கடுமையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி ஒரு ரூபாய்கூட ஊழல் செய்யவில்லை என்று கூறுகிறது ஆனால் ஊழல் செய்ததாக நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள் என்று நெறியாளர் கேட்டார். அதற்கு சுப்பிரமணியன் சுவாமி, “ திருடன் என்றாவது திருடியதை ஒப்புக்கொண்டிருக்கிறானா. இது மிகப்பெரிய திருட்டு, அதனால்தான் மறுக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்
பாஜகவின் பழிவாங்கல் என்று காங்கிரஸ் கூறுகிறதேன் என்ற கேள்விக்கு சுப்பிரமணியன் சுவாமி பதில் அளிக்கையில் “ நான் என்ன பழிவாங்கப் போகிறேன். அவர்கள்தான் தவறு செய்துள்ளார்கள், பிடிபட்டுள்ளார்கள். நீதிமன்றம் முடிவெடுக்கும். இதில் என்ன பழிவாங்கல் இருக்கிறது.
2ஜி அலைக்கற்றை ஊழலுக்கு எதிராககூடத்தான் நான் குரல் கொடுத்தேன், அதை பழிவாங்கல் எனக் கூறுவதா. எப்போதுவேண்டுமானாலும் ராகுல், சோனியாவை இதுதொடர்பாக கேட்டால் மக்களை திசைதிருப்பும் நோக்கில் பேசுவார்கள். நான் தொடர்ந்த இந்த வழக்கில் அவர்கள் இருவரும் பல பிரச்சினைகளைச் சந்திப்பார்கள். நான் 4 பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.
இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரும் குற்றம்நிரூபிக்கப்பட்டால், 20 முதல் 25 ஆண்டுகள்வரை சிறைதண்டனை பெறுவார்கள். அமலாக்கப்பிரிவு விசாரணைக்குப்பின் ராகுல் காந்தி கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.
Tags: News