ராம் சரணை இயக்கும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்
Posted on 12/02/2021
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகரான ராம்சரண் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
'மகதீரா' என்ற மொழி மாற்றம் செய்யப்பட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் சரண். தெலுங்கு திரை உலகில் நட்சத்திர அந்தஸ்துடன் இருக்கும் மூத்த நடிகரான சிரஞ்சீவி அவர்களின் வாரிசான இவர், இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே தருணத்தில் தயாராகும் இந்தப் படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார்.
இயக்குனர் ஷங்கர் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் தயாராகும் 'இந்தியன் 2' என்ற படத்தை இயக்கி வருகிறார். பல்வேறு தடைகளால் இப்படத்தின் பணிகள் இடை இடையே இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், 'இந்தியன் 2' படத்தின் பணிகள் நிறைவடைந்தவுடன் ராம்சரண் படத்தின் பணிகள் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
நடிகர் ராம் சரண் தற்போது இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி வரும் 'ரணம் ரத்தம் ரௌத்திரம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.