விவசாயத்திற்கு மதிப்பும், ஆரோக்கியத்திற்கு சிறப்பும் செய்யும் ஆச்சி!
Posted on 25/04/2017
விவசாயிகளுக்கு கௌரவத்தையும், ஒவ்வொரு தனிமனிதர்களின் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வையும் ஊட்ட வேண்டும் என்பதற்காக ‘ஆச்சி’ நிறுவனம் கருத்தாழமிக்க புதிய டெலிவிஷன் விளம்பரப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த விளம்பரத்தின் முக்கியத்துவத்தை மக்கள் முழுமையாக உணரவேண்டும் என்பதற்காக ஆச்சி உணவுப்பொருள் தயாரிப்பு குழுமத்தின் தலைவர் திரு.ஏ.டி.பத்மசிங் ஐசக் அவர்களே அதில் தோன்றுகிறார்.
‘ருசியாய்... ருசி ருசியாய்...’ என்ற இதயத்தைத்தொடும் பாடலோடு தொடங்கும் இந்த விளம்பரப்படத்தில், திரு.ஏ.டி.பத்மசிங் ஐசக் அவர்கள் இந்தியாவில் பல பகுதிகளில் உள்ள விவசாய பெருங்குடி மக்களை தேடிச்சென்று, இயற்கை எழில் சூழ்ந்த தோட்டங்களில் அவர்களை சந்திக்கிறார். மஞ்சள், மிளகாய், மல்லி, ஏலக்காய் போன்ற உணவுப்பொருட்களை வளமான மண்ணில் சிறப்பாக விளைவிக்கும் விவசாயிகளை கரம் குலுக்கி, கட்டிப்பிடித்து பாராட்டுகிறார்.
இந்தியாவின் பல மாநிலங்களில் தோட்டத்தில் இருந்து நேரடியாக ‘ஆச்சி’க்காக கொள்முதல் செய்யப்படும் அந்த விளைபொருட்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, நவீன முறையில் தயார் செய்யப்பட்டு, சுகாதாரமான முறையில் ‘பேக்’ செய்யப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட உணவுப் பொருளாக ஒவ்வொரு வீட்டு சமையல் அறையையும் வந்தடைவதுவரை அதில் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அது ஆரோக்கியத்துக்கு எவ்வாறு உறுதி தருகிறது என்பதை மக்கள் புடைசூழ எழுச்சியுடன் தோன்றி திரு.ஏ.டி.பத்மசிங் ஐசக் அவர்கள் நமது மனதில் பதிய வைக்கிறார்.
மக்களை மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் விதத்தில் பாடலும், காட்சிகளும், கருத்துக்களும் இந்த விளம்பரத்தில் பொதிந்திருக்கின்றன. “இத்தகைய விளம்பரம் இப்போது வெளியிடப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்..” என்று கூறிய திரு.ஏ.டி.பத்மசிங் ஐசக் அவர்கள், அதற்கான காரணங்களை பத்திரிக்கையாளர்களிடம் விளக்கினார்.
அவர் கூறியதாவது: “நாம் மதிய உணவுக்காக டைனிங் டேபிளில் உட்கார்ந்திருக்கும்போது சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம் போன்றவைகள் எல்லாம் நம்மை சுற்றி இருக்கும். நாம் ரசித்து, ருசித்து சாப்பிடுவோம். அதில் நமக்கு தேவைப்படுவது ஆரோக்கியம். ஆனால் அந்த உணவு உருவாக தேவைப்படுவது எது, விவசாயம். நமக்கு சப்பாத்தி தேவை என்றாலும், சாம்பார் தேவை என்றாலும் அதற்கு விவசாயம் தேவை, விவசாயிகள் தேவை, நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுத் துணுக்கிலும் விவசாயியின் வியர்வை பதிந்திருக்கிறது.
ஆனால் இன்று அந்த விவசாயிகளின் நிலை எப்படி இருக்கிறது. கடன், கஷ்டம், அவமானம், அச்சுறுத்தல், தற்கொலை என்று தினமும் அவர்கள் சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். நமது உணர்வோடும், உதிரத்தோடும் கலந்திருக்கும் விவசாயிகளுக்கு ‘ஆச்சி’ உணவுப்பொருள் நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக மதிப்பையும், மரியாதையையும், கௌரவத்தையும் கொடுத்து, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயலை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. நாங்கள் தினமும் டன் கணக்கில் விளைபொருட்களை, இடைத்தரகர்கள் இன்றி, விவசாயிகளை தோட்டத்திலே சந்தித்து, உ(ய)ரிய விலை கொடுத்து கொள்முதல் செய்துகொண்டிருக்கிறோம். அப்படி பார்த்துப்பார்த்து கொள்முதல் செய்வதால்தான் விவசாயிகளின் நலனையும், எங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தையும் எங்களால் காக்க முடிகிறது.
இந்த உண்மையை மக்களுக்கு உணர்த்த விரும்பினோம். இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் உணவுப்பொருளை விளைய வைக்கும் விவசாயிக்கும் - நாட்டின் இன்னொரு மூலையில் அமர்ந்து அதை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எங்கள் வாடிக்கையாளருக்கும் இடையே உணர்வுப்பூர்வமான ஆத்ம பந்தத்தை ஏற்படுத்த விரும்பினோம். ஒருபுறம் விவசாயிகளின் உழைப்பு மேலும் கௌரவிக்கப்பட்டு அவர்களது வாழ்க்கைத்தரம் மேலும் உயரவேண்டும். மறுபுறம் இந்திய மக்களின் ஆரோக்கியம் இன்னும் மேம்படவேண்டும். இந்த இரண்டையும் வலியுறுத்தவே இந்த புதிய விளம்பரப்படத்தை தயாரித்துள்ளோம்.
இந்த விளம்பரத்தில் நான் தோன்ற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதையும் சொல்லி விடுகிறேன். ஒரே உணவுப்பொருளைக் கொண்டு தாய் உணவு தயாரிப்பதற்கும்- இன்னொருவர் தயாரிப்பதற்கும் சுவையில் வித்தியாசம் உண்டு. தாய், மசாலாக்களோடு தனது உணர்வையும், அன்பையும், ஈடுபாட்டையும் கலந்து தருவார். அதுதான் அதிக ருசிக்கு காரணம்.
அதுபோல் ‘உங்கள் ஆரோக்கியம் எங்கள் லட்சியம்’ என்ற எங்கள் கொள்கையை மற்றவர்கள் தோன்றி சொல்வதைவிட, ஆச்சி நிறுவனத்தின் தாய் போன்ற நானே சொல்வது உணர்வுரீதியாக மக்கள் இதயத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான் நானே தோன்றியிருக்கிறேன்.
22 ஆண்டுகளாக நான் இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான விவசாயிகளோடு நேரடி தொடர்பில் இருக்கிறேன். அவர்களை நான் தொடர்ந்து கௌரவப்படுத்தி வருகிறேன். அதையும் காட்சிப்படுத்தி மக்கள் மனதில் பதியவைக்க இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டேன். இந்த விளம்பரப்படத்தை இந்திய விவசாயிகளுக்காக சமர்ப்பிக்கிறேன்.
Tags: News, Lifestyle, Art and Culture