இயக்குநர் சிகரம் தெருப்பையனின் சைக்கிள் பயணத்தின் கனவு நனவு ஆகுமா?
Posted on 04/08/2017
நீண்ட நாட்களாகவே என்னைப் போன்ற பலகோடி நபர்களின் இதயங்களில் ஒரு கவலை தினமும் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த கவலை குடும்பக் கவலை அல்ல. நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கின்ற பூமி, கடுமையாக கொதிக்கிறது. இந்த கொதிப்பு அதிகரித்து கடல் மட்டமும் உயர்கிறது. ஒருபுறம் உலக வெப்பமயம், மறுபுறம் கடுமையான காற்றுச்சூழல் கேடு. இந்த 2 பிரச்சனைகளும் தொடர்ந்து நீடித்தால் பூமி முழுவதும் சஹாரா பாலைவனம் தான்.
தண்ணீர் இல்லாத உலகத்தை நினைத்துப் பாருங்கள். நிலத்திற்கும், தங்கத்திற்கும் பணத்தை இறைக்கும் நாம், இனி தண்ணீருக்குப் பணம் அள்ளித் தர வேண்டும். 2025-ம் ஆண்டில் உலகில் 180 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் பரிதவிக்கும் அபாயம் உள்ளதென, ஆய்வுகள் எச்சரிக்கின்றன. கடந்த 50 ஆண்டுகளில் தான் பூமி. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன அதிகரிப்புகள், தொழிற்சாலைகள் அதிகரிப்பால் காற்றில் கரிமப்புகை அதிகம் கலந்து காற்று மாசடைந்துள்ளது. இந்த காற்று சீர்கேட்டால் ஏற்பட்ட அபாய மணி தான், டெல்லி காற்றுச்சூழல் நிலை, அங்கு காற்றில் மோட்டார், தொழிற்சாலை ரசாயணங்களில் புகை கலப்பு அதிகமாகி, அதனை சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்சினை அதிகரித்துள்ளது.
அங்கு மருத்துவர்களிடம் வரும் 10 நோயாளிகளில் 3-4 நோயாளிகள் ஆஸ்துமா, அலர்ஜி என சுவாசப் பிரச்சினையில் அவதிப்படுகிறார்கள். மோட்டார் வாகன கரிப்புகையால் உலக வெப்பம் (Global warming) அதிகரித்து, கடும் வறட்சி, வெள்ளம் என இயற்கையின் இயல்பு நிலை தடுமாறியுள்ளது. இதைத் தவிர்க்க முடியுமா? வாகனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தினால் கரிப்புகை குறையலாம். கரிப்புகை குறைந்தால் காற்று கெடுவது குறையலாம்.
டெல்லியில், ஒரு நாள் சாலையில் ஓடும் மோட்டார் வாகனம், மறுநாள் ஓட அந்த யூனியன் பிரதேச அரசு தடை விதித்துள்ளது. சீனா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காற்றுச்சூழலை, காற்றைப் பாதுகாக்க, சிறிய தூரப்பயணத்திற்கு சைக்கிளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம் டர்ன் புல் சைக்கிளில் செல்கிறார்.
நெதர்லாந்து நாட்டில் சைக்கிள் தான் முக்கிய வாகனமாக உள்ளது. நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட், பிரதமர் அலுவலகத்திற்கு சைக்கிளில் தான் வந்து செல்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் நெதர்லாந்துக்குச் சென்றார். அப்போது அந்த நாட்டுப் பிரதமர் மார்க் ரூட், நமது பிரதமருக்கு சைக்கிளைப் பரிசளித்தார்.
சரி... இந்தக் கண்ணீர் கட்டுரை எழுதும் என்னைப் பற்றி சொல்கிறேன். எனது பெயர் எஸ்.பிரேம்குமார். 30 வருட பத்திரிக்கையாளர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியிலுள்ள நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் வளர்ந்தவன். எனது தெரு, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்ந்த பகுதி. நான் 30 ஆண்டுகளாக சைக்கிளில் தான் சென்று எனது பணிகளை செய்து வருகிறேன். சைக்கிளை ஓட்டினால், மூட்டு வலிப் பிரச்சினையைத் தவிர்க்கலாம். காற்று கெடுவது குறையும்.
இனி, வார விடுமுறை நாட்களில் சைக்கிள் ஓட்டுவீர்களா? தமிழகம் முழுவதும் சைக்கிள் ஓட்டுவதன் முக்கியத்துவம் குறித்து, நான் விளக்கிக் கூற விரும்புகிறேன். நீங்கள் அழைத்தால், உங்கள் ஊருக்கு வருகிறேன். மாணவ/ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் சைக்கிளை அதிகம் பயன்படுத்த வேண்டுமென்பது எனது வேண்டுகோள்.
என்னை தொடர்பு கொள்ள 9487182245 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழையுங்கள்.
நன்னிலம் கருதி,
எஸ்.பிரேம்குமார்,
மூத்த பத்திரிக்கையாளர்
Tags: News, Art and Culture