LIC-க்கு வயது 60!
Posted on 08/09/2016
LIC நிறுவனம் 01.09.2016 அன்று தனது 60வது நிறுவன நாள் விழாவினை விமரிசையாகக் கொண்டாடியது. “மக்களின் சேமிப்பு மக்களின் நலனுக்கே” என்பதை நடைமுறையாக்கி, மகத்தான 60 ஆண்டுகளை நிறைவு செய்து, தனது 61வது நிறுவன நாளில், “வைர விழா கொண்டாட்டங்களுடன்” LIC அடியெடுத்து வைக்கிறது. 1956-ம் ஆண்டு 5 கோடி மூலதனத்துடன் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் இன்றைய சொத்து மதிப்பு 22 லட்சம் கோடி.
168 கிளை அலுவலகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு இன்று 4762 அலுவலகங்களும், 33161 அங்கீகரிக்கப்பட்ட பாலிசிதாரர் மையங்களும் உள்ளன. நாளது தேதியில் 29 கோடி பாலிசிகள் LIC-யில் நடப்பில் உள்ளன. வைர விழாக்கொண்டாட்ட துவக்கவிழா LIC மதுரைக்கு கோட்டத்தின் முதுநிலைக் கோட்ட மேலாளர் திரு.P.J. நிக்கல்சன் அவர்கள் தலைமையில் LIC-யின் மதுரை கோட்ட அலுவலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 01.09.2016 அன்று காலை 10.30மணியளவில், முதுநிலைக் கோட்ட மேலாளர் அவர்கள் விழாவிற்கு வந்த LIC-யின் அனைத்துப் பிரிவு ஊழியர்கள், முகவர்கள், பாலிசிதாரர்கள் மற்றும் LIC யின் பென்சன்தாரர்களை வரவேற்று, நிறுவனக்கொடியை ஏற்றினார்.
கோட்டத்தின் வணிக மேலாளர் திரு.G.கருப்பசாமி அவர்கள் வரவேற்புரை நல்கினார். சிறப்பு விருந்தினராக LIC-யின் பாங்க் அஷ்யூரன்ஸ் பங்காளரான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் திரு.S.செந்தில் ஆனந்தன் அவர்கள் கலந்து கொண்டார்.
முதுநிலைக் கோட்ட மேலாளர் தனது வாழ்த்துரையில் நிறுவனத்திற்கு மதுரைக் கோட்டத்தின் வணிகப்பங்களிப்பு பற்றி எடுத்துரைத்தார். தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரியை உள்ளடக்கிய தென்மண்டலத்தில் மதுரைக் கோட்டம் முன்னணிக் கோட்டமாகத் திகழ்வதை பெருமையுடன் நினைவு கூர்ந்து, இதற்கு காரணமாகிய ஒவ்வொரு ஊழியரையும் கிட்டத்தட்ட 10,000 முகவர்களையும் பாராட்டி, நன்றி கூறினார். 31.08.2016-டன் முடிவுற்ற 5 மாதத்தில், கோட்டமானது 57,000 பாலிசிகளையும், ரூ.86 கோடி முதற்பிரீமியமும் ஈட்டியதை சுட்டிக் காட்டினார்.
1956-ம் ஆண்டு துவங்கி 2016 வரையுள்ள இந்த 60 ஆண்டு கால நீண்ட பயணத்தில், LIC-யின் தேச வளர்ச்சிக்கான பல்வேறு நிதிப்பங்களிப்பு மற்றும் தனியார் மயமாக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டத் துறையில், LIC-யின் தொடர்ச்சியான சந்தை ஆதிக்கம் போன்றவை. முதுநிலைக்கோட்ட மேலாளரின் சிறப்புரையில் இடம் பெற்றிருந்தது.
சிறப்பு விருந்தினரான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் மண்டல மேலாளர் திரு.S.செந்தில் ஆனந்தன் தனது வாழ்த்துரையில், LICயின் உலகத்தரமான சேவை பற்றியும், ஆசியாவின் பெருமைமிகு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் LIC எனவும், நிறுவனம் இன்றைக்கு செயல்படும் துடிப்போடு நூற்றாண்டு விழாவை நோக்கி வீறுநடை போட வேண்டும் என வாழ்த்தினார்.
LIC நிறுவனத்தின் கோட்ட அலுவலகம் மற்றும் நகர்க்கிளைகளில் பணியாற்றி, நடப்பு நிதியாண்டில் ஓய்வு பெறும் LICயின் அனைத்துப்பிரிவு ஊழியர்களும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். செப்டம்பர் 1-ம் தேதி துவங்கி 7-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஒருவார வைர விழாவில், பள்ளிக் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, ஊழியர்களுக்கான பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைரவிழா ஆண்டில், இன்ஷ்யூரன்ஸ் வாரவிழா நிறைவுநாள் நிகழ்வுகள் 07.09.2016ல் கோட்ட அலுவலக வளாகத்தில் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோட்டத்தின் விற்பனை மேலாளர் திரு.V.S.அனந்தகுமார் தலைமையிலான ஊழியர் குழு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. கோட்டத்தின் தொழிலாளர் நல்லுறவு மேலாளர் திரு.K.முருகேசன் அவர்கள் நன்றியுரை நல்க, விழா இனிதே நிறைவுபெற்றது.
P.J.Nicholson, Senior Divisonal Manager
முதுநிலைக்கோட்ட மேலாளர்
Tags: News, Lifestyle