GST இந்திய வரலாற்றில் சீர்திருத்தத்தை கொண்டுவரும். - திருமதி பூர்ணிமா!
Posted on 07/07/2017
திருமதி. பூர்ணிமா வெங்கடேஷ் அவர்கள் உளவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று டாட்காம் இன்போவே இயக்குனராகவும், சி.எஸ்.ஆர். மெமோரியல் மெட்ரிகுலேசன் பள்ளி மற்றும் சீதாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் குழு உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். இவரது கணவர் திரு.சி.ஆர்.வெங்கடேஷ் கணிணி துறையில் முன்னிலை வகிக்கின்றார்.
திருமதி பூர்ணிமா வெங்கடேஷ் யங் இந்தியன்ஸ் என்னும் அமைப்பில் முக்கியப் பங்காற்றிவருகிறார். அத்தோடு குழந்தைகள் நலம் பேணுவதிலும் பெரும்பணி ஆற்றி வருகின்றார். 2012ம் ஆண்டில் ’திருமதி மதுரை’ என்ற விருதையும் 2016-ம் ஆண்டில் ’பெண் சாதனையாளர்’ விருதையும் பெற்றுள்ளார். இவர் மதுரையின் சமூக ஆர்வலராக இருந்து பல்வேறுவிதமான பொது சேவைகளில் பங்காற்றி வருகின்றார்.
அட்வென்சரின் ஜுலை மாத முதல் இதழின் கௌரவ ஆசிரியராக இருப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய கருத்துக்களும், என் வாழ்க்கையில் சந்தித்த சில சிறந்த நபர்களின் நேர்காணல்களும், கட்டுரைகளும் அட்வென்சர் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்புகிறேன். இதைப்போலவே, இனிவரும் காலங்களில் ஒவ்வொரு கௌரவ ஆசிரியரும் அட்வென்சர் இதழின் மூலமாக பல நல்ல, பயனுள்ள விஷயங்களை வாசகர்களுக்கு தந்து பெருமைபடுத்துவார்கள்.
லஞ்சம், ஊழல், பண பதுக்கள் போன்ற சமூதாய சீரழிவுகளை ஏற்படுத்தும் விஷயங்களை அறவே ஒழிப்பதற்காக பாரத பிரமதர் திரு.மோடி அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழைய ரூபாய் நோட்டுகளான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பினால் சிலருக்கு சில நாட்களுக்கு கஷ்டங்கள் ஏற்பட்ட போதிலும் ஒட்டு மொத்த இந்தியாவிற்கு நல்லதே நடந்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த முப்பது ஆண்டுகளாக பல மட்டங்களில் பரிசீலனையில் இருந்துவந்த GST வரி விதிப்பானது இப்போது அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ‘ஒரே வரி, ஒரே இந்தியா’ என்கிற சித்தாந்தத்தை ஜி.எஸ்.டி உருவாக்கும் என்றும் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். இதைப்பற்றியதான பரவலான விமர்சனங்கள் அதிகளவில் இருந்து வருகின்ற போதிலும், இது இந்திய வரலாற்றில் வரிப்விதிப்பு பாதையில் ஒரு மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டுவரும்.
இதனால் உருவாக்கப்படும் கூடுதல் நிதி ஆதாரத்தைக் கொண்டு இந்தியாவில் பல உன்னதமான திட்டங்களை மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிறைவேற்ற முடியும்.
வியாபாரத்தில் சிலருக்கு இந்த புதிய வரிவிதிப்பானது சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும், காலப்போக்கில் சரிசெய்யப்பட்டு விடும். ஜி.எஸ்.டி-யால் சேவை அடிப்படையிலான பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என நாம் நம்புகிறோம்.
உதாரணமாக அரசுப்பள்ளிகள் தரம் உயரப்பெற்று தனியார் பள்ளிகளுக்கு இணையாக இயங்கவும், அரசுப்பேருந்துகள் அனைத்தும் தனியார் பேருந்துகளுக்கு இணையாக சிறப்புடன் இயங்கவும், நல்ல சாலை மற்றும் குடிநீர் வசதிகள் மேம்படவும், அரசாங்க மருத்துவமனைகளின் தரம் உயர்வடையவும், லஞ்ச லாவண்யங்கள் பெருமளவில் குறையப்பெற்று மக்கள் மனநிம்மதியுடன் வாழ ஜி.எஸ்.டி பெருமளவில் உதவும் என மனப்பூர்வமாக நம்பலாம்.
Tags: News, Lifestyle