செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் ஏன் பிரதமர் படம் இல்லை!
Posted on 28/07/2022
பன்னாட்டு அளவில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தேசத்தின் பெருமையை பறை சாற்ற வேண்டும். நாட்டின் பிரதிநிதியாக இருப்பவர்கள் குடியரசு தலைவர், பிரதமர் அவர்கள் படம் ஏன் விளம்பரங்களில் இடம் பெற வில்லை- உயர் நீதிமன்ற மதுரை கிளை
செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் புகைப்படங்கள் ஏன் இடம்பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நாளை தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியின் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெறவில்லை என பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. நேற்று பிரதமர் மோடியின் புகைப்படங்களை செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பாஜகவினர் ஒட்டினர். இதை தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமர் படத்தை மை பூசி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில், பிரதமர் மோடி படத்தை வைக்க கோரி ராஜேஷ் குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஒலிம்பியாட் செஸ் தொடர்பான அனைத்து விளம்பரங்களிலும் பிரதமர் படம் இடம் பெறாததற்கு நிபந்தனையின்றி தமிழக அரசு சார்பில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது,, பன்னாட்டு அளவில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தேசத்தின் பெருமையை பறை சாற்ற வேண்டும். நாட்டின் பிரதிநிதியாக இருப்பவர்கள் குடியரசு தலைவர், பிரதமர் அவர்கள் படம் ஏன் விளம்பரங்களில் இடம் பெற வில்லை’ என உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியது.
அப்போது, செஸ் ஒலிம்பியாட் குறித்து இன்று நாளிதழ்களில் வந்த விளம்பரங்களை, நீதிபதிகள் முன் அரசு தரப்பு வழக்கறிஞர் காட்டினார். அதில், பிரதமர், படம் உள்ளதாக கூறினார். இதையடுத்து, ' செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறுவது சிறப்பு தான், நாம் அனைவரும் நாட்டிற்காகத்தான் உழைக்கிறோம். ஆனால் இதில் சிறு தவறு நடந்துள்ளது. பிரதமர் ஒப்புதல் இல்லாமல் , இந்த நிகழ்வு நடைபெறுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் பார்த்து கொள்ளப்படும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்து தீர்ப்பை தற்காலிகமாக ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
Tags: News