தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு
Posted on 09/03/2022
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை சில தினங்களுக்கு முன் அதிகரித்த நிலையில் விரைவில் மின்சார கட்டணமும் அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடனே நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டு நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறினார். அதேபோல் தமிழக அரசின் நிதி நிலையை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.
கடந்த அதிமுக அரசு கஜானாவை காலியாக்கியதோடு கடன் சுமையால் தள்ளாட வைத்துவிட்டது என விமர்சனங்கள் எழுந்தன. அந்த நேரத்தில் கொரோனா பெருந்தொற்றும் அதிகளவில் பரவியது. இதனால் நிதி நிலைமையை சரிபடுத்த எந்த உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
தற்போது கொரோனா பொது முடக்கம், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை முடிந்துள்ளதால் அரசு நிதி நிலைமையை சரி செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.
தமிழ்நாடு மின் வாரியம் 1.60 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. தற்போதுள்ள மின்சார கட்டணம் 2014ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு 30 சதவீதம் மின் கட்டணம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக மக்களவைத் தேர்தல், அதோடு சேர்ந்து நடைபெற்ற மினி சட்டமன்றத் தேர்தல் ஆகியவை காரணமாக மின் கட்டண உயர்வு முடிவை கைவிட்டது.
அதன்பின்னரும் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் உள்ளதாக கோட்டை வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 18ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் தமிழக மக்களுக்கு ஆச்சிரியத்தோடு சில அதிர்ச்சிகளும் காத்திருக்கின்றன என்கிறார்கள்.
Tags: News