கூட்டணி குறித்து விஜயகாந்த் ஆலோசனை!

கூட்டணி குறித்து விஜயகாந்த் ஆலோசனை!

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்க ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அளித்த பேட்டியில், ‘அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளது என்றும், ஆனாலும் தேர்தல் கூட்டணி குறித்து கட்சித்தலைவர் விஜயகாந்த்தான் முடிவு எடுப்பார் என்றும்’ கூறி வருகிறார். தனித்து போட்டியிடும் அளவுக்கு தே.மு.தி.க. வலுவாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்.
 
இந்தநிலையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் 13.12.2020 ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
 
இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பங்கேற்கிறார். வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை தொடர்வதா? அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்தும் கருத்துகளை கேட்க உள்ளார்.
 
இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:- வருகிற சட்டசபை தேர்தல் தே.மு.தி.க.வுக்கு மிகவும் சவாலான தேர்தல் ஆகும். 2011-ம் ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்த தே.மு.தி.க., அதற்கு அடுத்து நடைபெற்ற 2016-ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி குறித்து சரியான முடிவெடுக்காத காரணத்தால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால் சட்டசபையில் தே.மு.தி.க.வுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விட்டது.
 
இதை கருத்தில் கொண்டு இந்த தேர்தலில் கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து கேப்டன் விஜயகாந்த் கருத்து கேட்க இருக்கிறார்.
 
தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருந்தாலும் ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் மாறுபட்ட கருத்து இருந்து வருகிறது. இதுபற்றி நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜயகாந்த்திடம் எடுத்து சொல்வோம்.
 
தற்போது கிளை கழக அளவில் தே.மு.தி.க. வலுவாகத்தான் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு கட்சிப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
 
கடந்த எம்.பி. தேர்தல் போல் இல்லாமல் வருகிற தேர்தலில் தே.மு.தி.க. கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் அளவிற்கு கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கருதுகிறோம்.
 
கூட்டணி குறித்து விஜயகாந்த் எடுக்கும் முடிவு தான் இறுதி முடிவு. அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஆனாலும் எங்கள் கருத்துகளை தைரியமாக எடுத்து கூறுவோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top