தமிழகத்திற்கு புதிய ஆபத்து - மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?

தமிழகத்திற்கு புதிய ஆபத்து - மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
 
கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஜிலின், சாங்சுன், ஷாங்காய் உள்ளிட்ட 10 நகரங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதை அடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது.
 
இந்நிலையில், தமிழகத்தில், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
 
சீனா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளிலும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மெத்தனம் காட்டாமல் முன்பு அமைத்தது போல் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைத்து, சிறுவர் முதல் முதியவர்கள் வரை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி, கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுதல் போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீண்டும் கடுமையாக்க வேண்டும் என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
 
வரும் முன் காப்போம் என்ற பழமொழிக்கேற்ப மீண்டும் கொரோனா தொற்று நம்மை அண்டாமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
 
இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top