மூன்று தென் மாநிலங்களில் ஒரே கட்ட சட்டமன்ற தேர்தல்!
Posted on 05/04/2021
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு, கடந்த பிப்ரவரி 26ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைதொடர்ந்து வேட்பு மனுத்தாக்கல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 6 கோடியே 26,7446 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதிமுக, திமுக, அமமுக-தேமுதிக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.
தமிழ் நாட்டில், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரன், கமல்ஹாசன் மற்றும் சீமான் என ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களின் பரப்புரையால் தேர்தல் பிரசாரக் களத்தில் அனல்பறந்தது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த சூறாவளி தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 7 மணியுடன் நிறைவுபெற்றது. 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான பரப்புரை நேற்று மாலை நிறைவடைந்தது. அங்கு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதேபோல், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. மொத்தம் 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், உச்சகட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இடது ஜனநாயக முன்னணி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று கன்னூர் பகுதியில் வாகன பிரசாரம் மேற்கொண்டார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கலந்து கொண்டார்.