சென்னை திரும்பிய முதல்வர்: 14 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கப் போகுது!

சென்னை திரும்பிய முதல்வர்: 14 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கப் போகுது!

முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு அதிகாலை சென்னை திரும்பினார்.

முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் அரசுமுறை பயணமாக மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டார்.
 
மார்ச் 24ஆம் தேதி மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பி அன்று இரவே துபாய் சென்றார். அங்கு நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் அரங்கை திறந்து வைத்தார்.
 
அதன் பின்னர் 2 நாட்கள் துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். துபாய் அரசு பிரதிநிதிகள் தொழிலதிபர்கள் என பலதரப்பினரிடம் ஆலோசனை நடத்தினார்.
 
துபாயிலிருந்து அபுதாபி கிளம்பிச் சென்ற முதல்வர் ஸ்டாலின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மேலும் பல நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்புவிடுத்தார்.
 
துபாய், அபுதாபி பயணம் மூலம் மொத்தம் தமிழ்நாட்டுக்கு 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நேற்று மாலை அபுதாபியில் நடைபெற்ற நம்மில் ஒருவர் நம்ம முதல்வர் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
 
இதைத்தொடர்ந்து தனி விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். தமிழ்நாடு திரும்பிய முதல்வருக்கு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தொழிற்துறை செயலர் கிருஷ்ணன், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக வெளிநாட்டினர் பாராட்டினர். தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 6 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தக்களும் வெறும் காகித பூக்களாகவே இருந்தன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்று கூறினார்.
 
முதல்வர் சென்னை திரும்பிய நிலையில் நாளை மறுதினம் டெல்லி பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்கிறார். அத்துடன் திமுக டெல்லி அலுவலக திறப்பு விழாவிற்கான பணிகளை பார்வையிடுகிறார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top