அண்ணாமலையின் திறமை கருணாநிதி, ஜெயலலிதாவுக்கே இல்லையாம் - அதிர்ச்சி கொடுத்த ராதாரவி!
Posted on 05/07/2022
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இருக்கும் திறமை எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றர்களிடமே இல்லை என ராதாரவி கூறியிருக்கிறார்.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று பாஜகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
சென்னையைப் பொறுத்தவரை 7 இடங்களில் உண்ணாவிரதம் நடத்த பாஜகவினர் திட்டமிட்டிருந்த சூழலில் காவல் துறை தரப்பில் ஒரு இடத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அண்ணாமலை, ராதாரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய ராதாரவி, “அண்ணாமலையை வளர்த்துவிட்டதே திமுகதான். எந்த நேரத்திலும் திமுக ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மோடியும், அமித்ஷாவும் கருவறுத்துவிடுவார்கள். திராவிட மாடல் என்பதெல்லாம் சோறு போடாது. அண்ணாமலை பழைய ஆளாக மாறினால் நீங்கள் என்ன ஆவீர்கள்?
பாஷை தெரியாத கர்நாடகாவிலேயே பப்பு விட்டு ஆட்டியவர் அண்ணாமலை. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என்று பல பேரை நான் பார்த்துள்ளேன். ஆனால் அண்ணாமலை போல் பேச்சுத்திறமை யாருக்கும் இல்லை. கருணாநிதியின் பெயர் போல் பத்திரிகைகளில் தினந்நோறும் அண்ணாமலையின் பெயர் வந்துகொண்டே இருக்கிறது.
அண்ணாமலையை வாடா போடா என்று யாரேனும் சொன்னால் வருத்தப்பட வேண்டாம். கடவுள் முருகனை டேய் முருகா என்று தான் அழைக்கின்றனர். உங்களை கடவுளாக எண்ணுவதால் தான் சில அமைச்சர்கள் வாடா, போடா என்று கூப்பிடுகின்றனர். உங்களைத் திட்டினால் தான் அமைச்சர் பதவி நிலைக்கும்.
டெண்டர், விற்பனை என்று திமுக அரசு செய்யும் விஷயங்கள் அனைத்தும் ஸ்டாலின் குடும்பத்துக்கே லாபத்தை ஈட்டித்தருகிறது இன்று ECR-ல் G Square-இன் அனுமதியின்றி இடம் வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.
தமிழ்ப் பாடத்தில் 40,000 பேர் பெயில் ஆகியிருக்கின்றனர். இந்த லட்சணத்தில் மாநில கல்விக்கொள்கை. திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? பொதுத்தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கு மேல் இதுதான் திமுக அரசின் சாதனையா?” என்றார்.
Tags: News