மத்திய அரசை எதிர்க்க வேண்டாம் – முதலமைச்சருக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை

மத்திய அரசை எதிர்க்க வேண்டாம் – முதலமைச்சருக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை

மத்திய அரசோடு எதிர்த்து நடந்துகொள்வது முதலமைச்சருக்கு சரியில்லை என்றும், பிரதமர் காரணமில்லாமல் எதையும் சொல்லமாட்டார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரித்துள்ளார். 

மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட பிறகு மதுரை கே.கே.நகர் பகுதியிலுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும், இது திமுக அல்ல என்றும் கூறினார். யாரை  தேர்ந்தெடுப்பது என்பது கழகத்தின் தலைமை தான், யாரை தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள் மற்றவர்கள் போட்டியிடுவது குறித்த தான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என கூறினார்.
 
சட்டமன்றத்தில் உதயநிதியை துதிபாடுவது திமுகவிற்கு ஒரு பின்னடைவுதான், மக்கள் திமுக மீது கோபத்தில் இருக்கிறார்கள். இது ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை, விலைவாசி விஷம் போல் ஏறி உள்ளதாக குறிப்பிட்ட செல்லூர் ராஜூ, எதிர்க்கட்சி விவாதங்களை முடக்க நினைக்கிறார்கள் என்றும் சாடினார். மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், முல்லைப்பெரியாறில் இருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் சரியாக நடைபெறவில்லை என்று நகர்ப்புறத்துறை அமைச்சரிடம் தெரிவித்ததாக கூறினார்.
 
பெட்ரோல் டீசல் வரியை தமிழ்நாடு குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் விமர்சனத்தை முதலமைச்சர் மறுப்பதாக சாடிய அவர், அண்டை மாநிலம் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து தரும் போது, தமிழ்நாடு ஏன் தரக் கூடாது என்று மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்தார். மத்திய அரசோடு எதிர்த்து நடந்துகொள்வது முதலமைச்சருக்கு சரியில்லை என எச்சரித்த செல்லூர் ராஜூ, பிரதமர் மோடி காரணமில்லாமல் எதையும் சொல்லமாட்டார் என்றும் தெரிவித்தார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top