தமிழ்நாடுபேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறதா?
Posted on 17/05/2022
தமிழகத்தில் பேருந்து மற்றும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் .
தமிழகத்தில் பேருந்து மற்றும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும், பேருந்து கட்டணம் எவ்வளவு உயர்த்தப்பட உள்ளது என்பது குறித்த அட்டவணையும் சமூக வலைதளங்களிலும் ஒரு சில ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்படி தற்போது குறைந்த கட்டணம் ஐந்து ரூபாய் இருக்கும் நிலையில் ஆறு ரூபாய் என மாற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், காய்கறிகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் தத்தளித்து வரும் தற்போது பேருந்து கட்டணமும் உயர்ந்தால் சாதாரண ஏழை எளிய குடிமக்கள் தாங்க மாட்டார்கள் என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்து அட்டவணை எதுவும் தயாராகவில்லை என்றும் இதுகுறித்து வெளியாகிக் கொண்டிருக்கும் அட்டவணை தவறான தகவல்கள் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் அவர்கள் கூறினார். மேலும் அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்தி பரவி வருகிறது என்றும் அவர் விளக்கமளித்தார்.
ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் பாதிக்காதவாறு பேருந்து கட்டணத்தை தமிழக முதல்வர் உயர்த்துவார் என அமைச்சர் நேரு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: News