ஸ்டெர்லைட்டில் 7 நாளில் ஆக்சிஜன் உற்பத்தி!
Posted on 06/05/2021
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கிய நிலையில், அப்பணிகளைக் கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு புதன்கிழமை சென்று களஆய்வு மேற்கொண்டனர்.
ஆக்சிஜன் தயாரிப்பு அலகு உள்ள இடத்தையும், ஆக்சிஜன் தயாரிப்புப் பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு பணியாளர்கள் செல்லாத வகையில் பாதுகாப்புத் தடுப்புகள் அமைத்தல், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையப் பகுதிக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாகவும் அவர்கள் பார்வையிட்டனர்.
இதையடுத்து, ஆட்சியர் கூறுகையில், ஆக்சிஜன் உற்பத்தி ஆலை இயங்கும் பணியில் ஈடுபடுவோர் விவரத்தை கண்காணிப்புக் குழு முடிவு செய்யும். ஆக்சிஜன் அலகு இயங்கத் தேவையான அனைத்து வசதிகளும் விரைந்து செய்யப்பட்டு பாதுகாப்பு ஆய்வு செய்யப்படும். பிறகு, மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் இன்னும் 7 நாள்களில் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.