பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு புகார்!
Posted on 07/04/2022
பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றைத் தடுக்காத உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தரமற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி முறைகேடு புகார் தொடர்பாக தொரடப்பட்ட வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ. பெரியசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி திமுக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை திமுக அரசு வழங்கியது. சில இடங்களில் இந்தப் பொருட்கள் தரமில்லாமல் இருந்ததாகப் புகார் எழுந்தது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயக்கோபி என்பர் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,296 கோடியே 88 லட்சம் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட இ-டெண்டரில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாக இருந்தன. பரிசுத் தொகுப்பில் இறந்த போன பூச்சிகளும் கிடந்தன. இதுபோன்ற தரமில்லாத பொருட்களை வினியோகிப்பதால் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, என்னுடைய இந்தக் குற்றச்சாட்டு புகார்களை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். தரமற்ற பொருட்கள் விநியோகித்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். ஆனால், அதிகாரிகள் இதுவரை ஒப்பந்ததாரர்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
எனவே, பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றைத் தடுக்காத உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தரமற்ற பொருட்களை விநோயோகம் செய்த அதிகாரிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் மனுதாரர் கோரியிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக லோக் ஆயுக்தா அமைப்பு, அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ. பெரியசாமி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார். மேலும் விசாரணையை வரும் ஜூன் 10- ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
Tags: News