பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது; மம்தா பானர்ஜி
Posted on 02/06/2022
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் ஆட்சிக்கு வர இயலாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், புருலியா மாவட்டத்தில் உள்ள ரவீந்திர பவனாவில் நடைபெற்ற நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தங்களுக்கு வரி வருவாயில் குறைந்த பங்கே வழங்கப்படுவதாகவும், 100 நாள் வேலைக்கான ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத்தொகையைத் தர வலியுறுத்தி, வரும் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், தங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்காவிடில் பாஜகவுக்கு ஆட்சியில் இருக்க தகுதியில்லை எனவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.
சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் பணமதிப்பு நீக்கம் தொடர்பாக பாஜக அரசை கடுமையாக விமர்சித்த அவர், "பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பலன்களைப் பெறுகிறீர்களா? என மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவதாக விமர்சித்த அவர், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர், மகாராஷ்டிராவில் சஞ்சய் ராவத், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் எனப் பலர் மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைக்கு உள்ளானதைச் சுட்டிக்காட்டினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் வெற்றி பெற முடியாது எனக் கூறிய அவர், பாஜக நாட்டை விற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
Tags: News