யுஜிசி உத்தரவால் மாணவர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி!
Posted on 18/12/2020
நடப்பு கல்வியாண்டில் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை யு.ஜி.சி வெளியிட்டுள்ளது.
கொரோனா சூழ்நிலை, பெற்றோரின் துயரங்கள் கருத்தில் கொண்ட யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு தீவிரமாக ஆலோசனை நடத்தியது. இந்த சூழலில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யு.ஜி.சி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கக் கூடும்.
இந்த சூழலில் நடப்பு கல்வியாண்டில் (2020-21) கல்லூரிகளில் சேர்ந்து நவம்பர் 30, 2020க்கு முன்பாக விலகி இருந்தாலோ அல்லது வேறு கல்லூரிகளுக்கு இடம்பெயர்ந்திருந்தாலோ, அவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும். சேர்க்கைக்கு பின்னர் விலகுவதால் இவர்களின் கல்விக் கட்டணத்தில் எதுவும் பிடித்தம் செய்யக் கூடாது.
மேலும் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விலகும் அல்லது வேறு கல்லூரிகளுக்கு மாறும் மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் முழுவதையும் திருப்பித்தர வேண்டும். இதற்கான செயல்பாட்டு கட்டணமாக அதிகபட்சம் ரூ.1,000 மட்டுமே பிடித்தம் செய்யலாம்.
அதற்குமேல் செய்யக் கூடாது. இந்த உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு யு.ஜி.சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.ugc.ac.in) தெரிந்து கொள்ளலாம்.