அல்காப்டோனூரியா என்ற அரிய பாதிப்புக்குரிய சிகிச்சை!
Posted on 07/07/2022
20 வயது முதல் 30 வயது வரை உள்ள எம்மில் சிலருக்கு, அவர்கள் வெளியேற்றும் சிறுநீரின் நிறத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு அல்காப்டோனுரியா என்ற அரியவகை பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும். இதற்குரிய சிகிச்சை பெற்றால் இதனை கட்டுப்படுத்த இயலும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் மக்களில் ஒருவருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. பாரம்பரிய மரபணு குறைபாட்டால் இத்தகைய பாதிப்பு ஒருவருக்கு உண்டாகிறது. எம்முடைய உடலில் டைரோசின் மற்றும் ஃபெனிலாலனைன் என்ற இரண்டு புரதத் தொகுதிகள், ஹோமோஜென்டிசிக் அமிலம் என்ற வேதிப் பொருளை உருவாக்குகிறது. இவை சிறுநீரின் நிறத்தை கருமையாக்கி, நாளடைவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இது காது, கண், மூட்டு பகுதி போன்றவற்றில் கருமை நிற பாதிப்பை ஏற்படுத்தி அறிகுறியை வெளிப்படுத்தும். இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் நாளடைவில் ஓஸ்டியோஓர்த்ரைடிஸ் எனப்படும் கால் மூட்டு வலி, தோள்பட்டை மூட்டு வலி ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன், இதய பாதிப்பு, சிறுநீரகம் மற்றும் புரஸ்டேட் பகுதிகளிலும் பாதிப்பை உண்டாக்கும். சிலருக்கு மூச்சு திணறலையும் ஏற்படுத்தக்கூடும்.
இதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பை உறுதிப்படுத்திய பிறகு, மருந்துகளாலும், உணவு முறைகளாலும் இதனை கட்டுப்படுத்தலாம். குறைவான புரதச்சத்து கொண்ட உணவு முறையை பின்பற்றுவதுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சியையும் தொடர்ச்சியாக கடைப்பிடித்தால் இத்தகைய பாதிப்பை ஆயுள் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும். சிலருக்கு இதன் பாதிப்பு மேற்கண்ட சிகிச்சைகளால் எதிர்பார்த்த அளவிற்கு முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் சத்திர சிகிச்சை மூலம் சீராக்கிக் கொள்ளலாம்.
டாக்டர்.கார்த்திகேயன்
தொகுப்பு: அனுஷா
Tags: News