சிறுநீர்ப்பை புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் புதிய பரிசோதனை முறை!
Posted on 20/05/2022
இன்றைய தேதியில் எம்மில் பலருக்கும் பல வகையான புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பான்மையானவர்களுக்கு இத்தகைய பாதிப்பை தொடக்க நிலையில் கண்டறிய முடிவதில்லை. இந்நிலையில் சிறுநீர் பை புற்றுநோய் மற்றும் புற நரம்பு பகுதியில் ஏற்படும் கட்டிகளை கண்டறிவதற்கு திரவ நிலையிலான புதிய பரிசோதனை முறை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், குடல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய்... என ஏராளமான புற்றுநோய் பாதிப்புகள் எம்மில் பலருக்கும் ஏற்படுகிறது. அசாதாரணமான முறையில் வளர்ச்சி அடையும் புரதச்சத்தின் காரணமாக புற்றுநோய் கட்டிகள் உண்டாகிறது. இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பை துல்லியமாக அவதானிக்க அக்கட்டிகளில் பயாப்ஸி எனப்படும் திசு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த திசு பரிசோதனையின் மூலம் தான் புற்றுநோயின் பாதிப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சில வகையான புற்றுநோய் பாதிப்பை தொடக்க நிலையில் கண்டறிவதற்கு ரத்த பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை என்ற திரவ நிலையிலான பரிசோதனையில் கண்டறிய இயலும் என மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். குறிப்பாக சிறுநீர் பை புற்றுநோய், புற நரம்புகளில் ஏற்படும் கட்டிகள் ஆகியவற்றை ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனைகளின் மூலம் தொடக்க நிலையில் கண்டறிய இயலும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
டாக்டர். குரு பாலாஜி
தொகுப்பு: அனுஷா
Tags: News