மீண்டும் இணையும் தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி
Posted on 22/04/2021
'கர்ணன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க தனுஷ் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனை டுவிட்டர் பதிவின் மூலம் தனுஷ் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த ஆண்டின் மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார். இதனால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
இதனிடையே 'கர்ணன்' படத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மாரி செல்வராஜ்,'பரியேறும் பெருமாள் படத்தை பார்க்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டேன். அவர் அந்தப் படத்தை பார்க்காமல், எம்மிடம் கர்ணன் படத்தின் கதையைக் கேட்டார். அவருக்கு கதை பிடித்திருந்தது. உடனடியாக தயாரிப்பாளர் தாணுவை சந்தித்து பணிகளை தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது தனுஷிடம், என்னிடம் இருக்கும் அனைத்து கதைகளுக்கும் நீங்கள் தான் நாயகன். உங்களை நினைவில் வைத்து தான் எழுதியிருக்கிறேன் என்றேன்.' என்று குறிப்பிட்டார்.
மாரி செல்வராஜின் இத்தகைய விருப்பத்திற்கு மதிப்பளித்து, நடிகர் தனுஷ் அவருடைய அடுத்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனால் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.