இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் இந்திய வம்சாவழியான ரிஷி சுனக்?
Posted on 07/07/2022
இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சனின் நடவடிக்கைகளை கண்டித்து நேற்று முன்தினம் நிதியமைச்சர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். இதையடுத்து, கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக ரிஷி தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
42 வயதான ரிஷி சுனக் கடந்த 2020ஆம் ஆண்டு நிதியமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருக்கும் நிலையில், இவரை கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்வதற்கு ஆதரவு பெருகி வருகிறது. இவர் மீது 'பெட்'டும் கட்டி வருகின்றனர். இவர் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கமாக இருந்தார். பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவரை அரசு பதவியில் போரிஸ் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்து இருந்தார்.
குறிப்பாக கொரோனா காலத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய நிதியமைச்சர் என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளார்ரிஷி சுனக். தொழில் நசியால் இருப்பதற்கும், தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் பல்வேறு கட்டங்களில் கடன் சலுகைகளை அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்து வந்தார்.
கொரோனா காலத்தில் எந்தளவிற்கு தனது பங்களிப்பை அளித்து சேவை செய்தாரோ அதே அளவிற்கு,சர்ச்சையிலும் சிக்கினார். கொரோனா கால கட்டத்தில் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, டவுனிங் ஸ்டிரீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவரை பலரும் விமர்சித்தனர்.
ரிஷி சுனக்கின் பாட்டி, தாத்தா பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவரது மனைவி இன்போசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா. ரிஷி, அக்ஷதா தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கலிபோர்னியாவில் படித்துக் கொண்டு இருக்கும்போது, ரிஷியும், அக்ஷதாவும் சந்தித்துக் கொண்டனர்.
தற்போது வெளியாகும் செய்திகளின்படி ரிஷி சுனக் இங்கிலாந்து நாட்டின் பிரதமரானால், இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தின் முதல் பிரதமர் என்ற பெயரை தக்க வைப்பார்.
Tags: News