3 நாட்கள் மீண்டும் முழு ஊரடங்கு
Posted on 15/03/2022
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில், வரும் 17 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த சில வாரங்களாக, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ், கெர்சான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ரஷ்யப் படைகள் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தின. ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் நாட்டின் முக்கிய கட்டடங்கள், குடியிருப்புகளை குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக, உக்ரைன் அரசு குற்றம் சாட்டி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் படையெடுப்பு காரணமாக அந்நாட்டில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் கீவ்வில், நாளுக்கு நாள் ரஷ்யப் படைகளின் படையெடுப்பு அதிகரித்து வருவதை அடுத்து, வரும் 17 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக, கீவ் நகர மேயர் அறிவித்துள்ளார். அதன்படி வரும் 17 ஆம் தேதி காலை 7 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: News