இளையராஜா – யுவன் இசையில் உருவாகும் வெங்கட் பிரபுவின் அடுத்த படம்!
Posted on 13/06/2022
நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கும் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இசையமைக்க உள்ளனர்.
வெங்கட் பிரபு இதுவரையில் 10 படங்களை எடுத்துள்ளார். அவற்றில் சமீபத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம் மெகாஹிட்டாகி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு அவரது பெரியப்பா இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருப்பார். மற்ற படங்களில் அவரது தம்பி பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு வாய்ப்பு அளித்திருப்பார்.
இந்நிலையில் தனது 11வது படத்திற்காக வெங்கட் பிரபு தற்போது தயாராகி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக உள்ள இந்த படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யா நடிக்கவுள்ளார். தமிழில் இது அவருக்கு முதல் படமாகும்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 23-ம்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக பாடல்களை பதிவு செய்யும் பணிகளில் வெங்கட் பிரபு மும்முரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவும், மகனும் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அதன்பின்னர் வெங்கட் பிரபு படத்தில் இணைந்துள்ளார்கள். இதேபோன்று முதன் முறையாக இளையராஜா உடன் வெங்கட் பிரபு இணையும் படமாக இது அமைந்துள்ளது.
நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹீரோவுக்கு சவால் விடுக்கும் வில்லன் என்பதாலும், திரைக்கதையில் வெங்கட் பிரபு மேஜிக் செய்வார் என்பதாலும் இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
Tags: News