ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்! தடைகள் உடைக்கப்பட்டன!
Posted on 27/01/2017
ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்குவதற்காக தமிழக சட்டசபையில் கடந்த 23-ந் தேதி புதிய சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்துக்கு முறைப்படி ஒப்புதல் பெற அது அன்றே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழக அரசின் சட்டம் பற்றி முதலில் உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. அதில் திருப்தி தெரிவித்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சட்டத்துறை, சுற்றுச்சூழல் துறை, கலாச்சாரதுறை ஆகிய மூன்று துறைகளுக்கும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மூன்று அமைச்சகங்களும் மின்னல் வேகத்தில் தமிழக அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கின.
நேற்று ஒரே நாளில் இவை அனைத்தும் முடிந்தன. இதைத்தொடர்ந்து ஜனாதிபதி இன்று இந்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்குகிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே இதை செய்து முடித்து விடும் என்று தெரிய வந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) அந்த சட்டத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளது. அந்த மசோதாவில் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் கையெழுத்திடுவார்.
கவர்னர் ஒப்புதல் அளித்ததும் ஜல்லிக்கட்டு சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துவிடும். திங்கட்கிழமை (30-ந் தேதி) அந்த சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக மாநில அரசுகள் உருவாக்கும் சட்டங்கள், நீண்ட ஆய்வுக்குப் பிறகே மத்திய அரசாலும், ஜனாதிபதியாலும் ஒப்புதல் அளிக்கப்படும். ஆனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு மத்திய அரசு 6 நாட்களில் ஆலோசனை செய்து ஒப்புதல் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக இளைஞர்கள், மாணவர்களின் உணர்வுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
மேலும் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் மீது வரும் திங்கட்கிழமை விசாரணை நடைபெற உள்ளது. அப்போது ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தற்காலிகமானது என்று கூறி தடை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதை முறியடிக்கவே மத்திய அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் துரித நடவடிக்கை காரணமாக ஜல்லிக்கட்டுக்கு இருந்த அனைத்து தடைகளும் உடைக்கப்பட்டு விட்டன.
Tags: News, Madurai News, Art and Culture