150 வருடங்களுக்கு பிறகு நாளை சூப்பர் ப்ளூ பிளட் மூன்!
Posted on 29/01/2018
சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் ஏற்படும் என்பது அறிவியல். முழு சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. அபோது, நிலவு நீல வண்ணத்தில் காட்சி அளிக்கும் என்பதால் அது 'புளு மூன்' என்று அழைக்கப்படும் ஒரு அரிய நிகழ்வாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நிலா தோன்றும் மாலை 6.25 மணியளவில் நேரத்திலேயே முழு சந்திர கிரகணமும் தோன்ற உள்ளது. இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, நிலா இயல்பு நிலை அடையும்.
இந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது என்றபோதிலும் வளி மண்டலத்தால் சிதறடிக்கப்படும் சூரிய ஒளியானது, நிலவின் மேல் படும். அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், நிலா சிவப்பாகவும் தோன்றும். ‘பிளட் மூன்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வும் மிகவும் அரியதாகும். 150 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது.
மற்றொரு அரிய நிகழ்வும் நாளை காத்திருக்கிறது. அதுதான் ‘சூப்பர் மூன்'. நிலவு, பூமியை சுற்றி வரும்போது, மாதத்துக்கு ஒருமுறை பூமியை மிகவும் நெருங்கி வருவது வழக்கம். அப்போது, நிலா வழக்கத்தைவிட பெரியதாக காணப்படும். இது சூப்பர் மூன் என அழைக்கப்படும். இந்த நிகழ்வும், நாளை முழு சந்திர கிரகணத்தின்போதே நடக்கிறது. வழக்கத்தை விட 10 சதவீதம் பெரியதாக நிலா காட்சி அளிக்கும் மற்றும் பிரகாசமாகவும் இருக்கும் என்பதால், புளூ மூன், பிளட் மூன் ஆகியவை பெரிதாக தெரியும்.
சந்திர கிரகண நேரத்தில், கடலிலும், ஆறுகளிலும் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அநேநேரம், யாரும் பயப்பட வேண்டாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். முழு சந்திர கிரகணம், இந்தியா முழுவதும் வெறும் கண்ணாலும் பார்க்க முடியும்.
முழு சந்திர கிரகணம் நிகழும் நேரத்தில் சாப்பாடு, தண்ணீர் குடிக்க கூடாது என்பது பல மக்களுக்கு பாரம்பரியமாக உள்ளது. ஆனால், அந்த நம்பிக்கைக்கு அறிவியல் அடிப்படை எதுவும் கிடையாது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை காலை 11 மணி முதல் இரவு 10.30 மணிவரை நடை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பல கோயில்களிலும் சந்திர கிரகண நேரத்தில் நடை சாத்தப்படுகிறது.
Tags: News, Madurai News, Art and Culture