குடியரசு தின வரலாற்றில் முதல்முறை... 10 நாட்டு தலைவர்கள்!
Posted on 25/01/2018
நாட்டின் 69வது குடியரசு தின விழா டெல்லியில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 10 ஆசியான் நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
வழக்கமாக ஏதாவது ஒரு நாட்டின் தலைவர்கள்தான் குடியரசு தின விழாவில் பங்கேற்று, குடியரசு தின அணிவகுப்பை பார்ப்பது வழக்கம். ஆனால், முதல் முறையாக இம்முறை 10 நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளநர்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், வியட்னாம் பிரதமர் குகுயென் சூவான் பக், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே, மலேசியா பிரதமர் நாஜிப் ரசாக், தாய்லாந்து பிரதமர் பிரயட் சான்-ஓ-சா, புருனே சுல்தானும் பிரதமருமான ஹஸனல் போல்கியா, லாவோஸ் பிரதமர் தொங்லோன் சிசோலித், கம்போடியா பிரதமர் ஹுன்சென், மியான்மர் தேசிய ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.
ஆசியான் அமைப்பில் இந்தியா இணைந்ததன் 25ம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் நடைபெறும் சிறப்பு மாநாட்டிலும் அவர்கள் பங்கேற்கின்றனர். 10 நாட்டு தலைவர்கள் வருகையையொட்டி, டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிசிடிவி கேமராக்களுக்காக மட்டும் ரூ.7 கோடி செலவிடப்பட்டதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இந்தியா மற்றும் ஆசியான் நாட்டு தலைவர்கள் கூட்டாக பங்கேற்ற சிறப்பு அமர்வு ஒன்று நடந்தது. இதில் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் கடல் பாதுகாப்பில் சந்திக்கும் சவால்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தென் சீனக்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் காரணமாக சீனாவுக்கும், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்தியாவின் தலைமையின்கீழ், இந்த 10 நாடுகளும் இணைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இது சீனாவுக்கு வைக்கப்படும் செக் என கூறுகிறார்கள் பாதுகாப்பு வல்லுநர்கள்.
முன்னதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை தனியே சந்தித்து, பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். நிதி தொழில்நுட்பம், சுற்றுலா, ஸ்மார்ட் நகரங்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதங்களை மேற்கொண்டனர்.
Tags: News, Art and Culture