யார் இந்த திரெளபதி முர்மு?
Posted on 22/06/2022
எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி ஜூலை 18 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாஜக சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள திரெளபதி முர்மு யார் என்று பார்ப்போம் வாருங்கள்.
ஒடிஸா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் கடந்த 1958-ம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி பிறந்தார் திரெளபதி முர்மு. இவரது தந்தை பெயர் பிராஞ்சி நாராயண் டுடு. இவர் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஜார்க்கண்டில் அதிக அளவில் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அஸ்ஸாம், திரிபுரா, பீகார், சத்தீஸ்கர், ஒடிஸா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்த சமூகத்தினர் அதிகம் பேர் வசித்து வருகின்றனர்.
ஒடிஸா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் திரெளபதி முர்மு படித்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். மகன்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனர். அரசியல் ஆர்வம் காரணமாக திரெளபதி முர்மு பாஜகவில் இணைந்தார். ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். ஒடிஸாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் (2000-2004) வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், கால்நடை வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மே 18ம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பதவி வகித்தார். ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் திரெளபதி முர்மு பெற்றார். அத்துடன், ஒடிஸா மாநிலத்திலிருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரு மாநிலத்தின் ஆளுநராக்கப்பட்டதும் அதுவே முதல் முறையாகும்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் விருப்பத் தேர்வாகவும் திரெளபதி முர்மு இருப்பார் என்று நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags: News