கருப்பனில் கொம்பனுக்கு அவமானம்... காத்தான் நோட்டீஸ்!
Posted on 16/07/2017
விஜய் சேதுபதி நடித்துள்ள கருப்பன் திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு காளையான கொம்பனை கிராபிக்ஸில் பயன்படுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர், இயக்குனருக்கு காளையின் உரிமையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் காத்தான். இவருக்குச் சொந்தமான காளை கொம்பன். நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் கருப்பன்' என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் ஒரு காட்சியில் கொம்பன் காளையை விஜய் சேதுபதி திமிலை பிடித்து அடக்குவது போல் படத்தின் மோஷன் போஸ்டரில் இடம்பெற்று உள்ளது.
யாராலும் அடக்க முடியாத எனது காளைக்கு இது அவமானம் என்று கூறி நடிகர் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம், இயக்குநர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் காத்தான். அதில் ஒரு வார காலத்திற்குள் முறையான அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு காளை கொம்பனை படத்தில் காட்சிப்படுத்தியதற்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்றும் எச்சரித்துள்ளார்.
இது குறித்து காத்தான் கூறுகையில், "இந்த ஜல்லிக்கட்டு காளையை எனது தாயார் நினைவாக வளர்த்து வருகிறேன். காளை கொம்பனுக்கு ஏராளமான ரசிகர்களும் ரசிகர் மன்றங்களும் உள்ளது. இதுவரை பிடிபடாத எனது மாட்டை பிடிமாடாக படத்தில் கிராபிக்ஸ் தொழில் நுட்ப உதவியுடன் காட்டியுள்ளது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனது காளை கொம்பனின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் இருந்ததால்தான் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது," என்றார்.
Tags: News, Hero, Star