நோ சொன்ன சரத்பவார் - எதிர்க்கட்சிகளின் அடுத்தத் தேர்வு யார்?

நோ சொன்ன சரத்பவார் - எதிர்க்கட்சிகளின் அடுத்தத் தேர்வு யார்?

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட வேண்டுமென்ற கோரிக்கையை சரத் பவார் உறுதியாக மறுத்துவிட்ட நிலையில், ஃப்ரூக் அப்துல்லா, கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரது பெயர்களை எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 -ம் தேதியுடன் முடிவடைகிறது. நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். பாஜக கூட்டணிக்கு 48% வாக்குகள் உள்ள நிலையில், இன்னும் கூடுதலாக 20 ஆயிரம் வாக்குகள் தேவைப்படுகிறது. 
 
எனவே பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து பாஜக வேட்பாளரைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனை ஒட்டி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி டெல்லியில் ஆலோசனை நடத்த 22 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐஎம்எல், ஆர்எஸ்பி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம், திமுக, ராஷ்டிரிய லோக் தள், ஐயுஎம்எல், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என 16 கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 
 
டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்,  இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பினோய் விஸ்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் எலமரம் கரீம், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, சிவசேனாவின் சுபாஷ் தேசாய், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
 
தெலங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம், சிரோன்மணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் விரும்பிய நிலையில், தனக்கு விருப்பமில்லை என அவர் உறுதியாக மறுத்து விட்டார். 
 
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் எனவும், அரசியலமைப்பின் உண்மையான பாதுகாவலராகப் பணியாற்றக் கூடிய ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் கூட்டம் நல்லத் தொடக்கமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார். 
 
சரத் பவார் மறுத்து விட்ட நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக ஃபரூக் அப்துல்லா மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்களை மம்தா பானர்ஜி பரிந்துரைத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. 
 
மேலும், பாஜகவும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியைத் தவிர்க்க விரும்புவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மல்லிகார்ஜுன் கார்கே, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top