காஷ்மீர் குல்மார்க்கில் தொடர் பனிப்பொழிவு
Posted on 09/12/2020
காஷ்மீரின் புகழ்மிக்க பனிச்சறுக்கு சுற்றுலாப் பகுதியான குல்மார்க் மற்றும் பிற பகுதிகளில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த பனிப் பொழிவு இருந்தது. அங்குள்ள சமவெளிப் பகுதியில் பெய்துவரும் மழை புதன்கிழமை முதல் குறையத்தொடங்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அலுவலகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது:
காஷ்மீரின் குல்மார்க் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை உச்சபட்சமாக 7 அங்குலம் அளவுக்கு பனிப் பொழிவு இருந்தது. மேலும், அநேக சமவெளி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை வரை பலத்த மழை நீடித்தது. பனிப் பொழிவு மற்றும் மழை காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கை இணைக்கும் ஸ்ரீநகர்-லே சாலை, லடாக் பகுதியை இணைக்கும் முகல் சாலை ஆகியவை மூடப்பட்டு, மாற்று பாதை வழியாக ஜம்மு பிராந்தியத்துக்கு சாலை போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் குல்மார்க் பகுதியில்தான் திங்கள்கிழமை இரவு பூஜ்யம் டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை குறைந்தது. மிகக் குறைந்தபட்சமாக மைனஸ் 2.4 டிகிரி செல்சியஸ் பதிவானது.