சேரனின் 'ஆட்டோகிராப்' பட பாடகர் கொரோனா தொற்றால் மரணம்
Posted on 05/05/2021
சேரனின் நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' என்ற படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே...' என்ற பாடலில் தோன்றிய பாடகர் கோமகன் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இசை அமைப்பாளர் பரத்வாஜ் இசையில் பாடலாசிரியர் பா.விஜய் தன்னம்பிக்கையூட்டும் பாடல் வரிகளில் உருவான 'ஒவ்வொரு பூக்களுமே...' என தொடங்கும் பாடல் இன்று வரை திரையிசை ரசிகர்களிடையே பிரபலம். இந்த பாடலில் நடிகை சினேகாவுடன் பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளி பாடகரான கோமகன் தோன்றுவார். இவர் அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இவர் பாடகராக அறியப்படுவதுடன், 2008ஆம் ஆண்டில் திமுக அரசால் அமைக்கப்பட்ட தமிழக அரசின் மாற்று திறனாளிகள் நல வாரியத்தின் நிர்வாக உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.