பெட்ரோல் விலை ரூ.3.38 உயர்வு: டீசல் விலையும் அதிகரிப்பு
Posted on 02/09/2016
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.67 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மாதந்தோறும் 1 மற்றும் 16-ஆம் தேதிகளில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, புதிய விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை அறிவித்தன.
இந்த விலை உயர்வையடுத்து, தில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.63.47-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.52.94-க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.63.02-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ.54.43-ஆக விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கடந்த 15 நாள்களில் கச்சா எண்ணெயின் விலை 13 சதவீதம் வரை அதிகரித்திருப்பதால், இந்த விலை உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கடந்த 2 மாதங்களில், பெட்ரோல், டீசல் விலை 4 முறை குறைக்கப்பட்டது. கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி பெட்ரோல் விலை ரூ.1-ம், டீசலின் விலை ரூ.2-ம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags: News, Lifestyle