திரைப்படமாக உருவாகும் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு
Posted on 27/12/2020
ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு தன் ராஜ்ஜியத்தை மீட்ட வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு 'வீரமங்கை வேலுநாச்சியார் - சிவகங்கை ராணி 'என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.
18k ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ராஜேந்திரன் மணிமாறன் இயக்கத்தில் 'வீரமங்கை வேலுநாச்சியார் சிவகங்கை ராணி' என்ற பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகிறது. இதுதொடர்பாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது...
'சிவகங்கையை ஆண்ட வீரமங்கை வேலு நாச்சியாரின் 224வது நினைவு நாள் டிசம்பர் 25ஆம் திகதியன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 'வீரமங்கை வேலுநாச்சியார் சிவகங்கை ராணி' என்ற பெயரில் திரைப்படத்தை தொடங்குவதற்கான பூஜை நடைபெற்றது. இந்த கதையை திரைப்படமாக தயாரிக்க சட்டரீதியான உரிமையை நாங்கள் பெற்றிருக்கிறோம். இப்படத்தில் வேலுநாச்சியாராக நடிக்க பல சரித்திர படங்களில் நடித்து அனுபவம் பெற்ற முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவர்களுடன் பல முன்னணி நட்சத்திர நடிகர்களும் நடிக்கவிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் ஒரே தருணத்தில் தயாராகும் இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜீவபாரதி வசனம் எழுதுகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு தைமாதம் தொடங்கும்.' என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே இயக்குனர் சுசி கணேசன் நடிகை நயன்தாரா நடிப்பில் வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.