பேறுகால குருதி அழுத்த பாதிப்புக்குரிய சிகிச்சை
Posted on 15/07/2022
உலக அளவில் திருமணமான பெண்கள் கருத்தரித்திருக்கும் காலகட்டத்தில் குருதி அழுத்த பாதிப்புக்கு ஆளாகும் எண்ணிக்கை ஆண்டுதோறும் 10 சதவீத அளவில் உயர்ந்து வருவதாகவும், இதனால் பெண்கள் பேறுகாலத்தின்போது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். பேறுகாலத்தின் போது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால், இது பிரசவத்தை சிக்கலாக்குவதுடன் தாய் மற்றும் சேயின் இதய நலத்தையும் பாதிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
பெண்கள் திருமணமாகி கருத்தரிக்கும் போது அவர்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய தருணங்களில் அவர்களுக்கு ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு என்றாலும், அதனைத் தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனையுடன் அவதானிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக 20 வயதிற்குட்பட்டவர்களும், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் கருத்தரித்திருந்தால் ரத்த அழுத்த விடயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் இவர்களில் யாருக்கேனும் உயர் குருதி அழுத்த பாதிப்பு, சிறுநீரக நோய் தொற்று, நீரிழிவு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
பேறு காலத்தின் போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவை விட அதிகமாக ரத்த அழுத்த உயர்வு, சிறுநீரில் புரதங்கள் வெளியேறுவது, வீக்கம், திடீரென்று உடல் எடை அதிகரிப்பு, பார்வையில் இடையூறு, குமட்டல், வாந்தி, அடி வயிற்றின் வலது பக்கத்தில் வலி ஏற்படுவது...போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அது பேறுகால ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா..? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்காக மருத்துவர்கள் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டு பரிசோதனை, ரத்த உறைவு பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு, இதன் பாதிப்பை உறுதிப்படுத்துவார்கள்.
பேறுகால ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளாகி இருந்தால் இவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கட்டாய ஓய்வு, மனதை இதமாக்கும் பயிற்சிகள், மருந்து ,மாத்திரைகள் போன்ற மருத்துவ சிகிச்சை நடைமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும். இதனை புறக்கணித்தால் பிரசவத்தின்போது உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டு, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். சிலருக்கு நாளடைவில் இதய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உண்டு. இதன் காரணமாக பேறுகாலத்தின்போது ரத்த அழுத்த அளவை மருத்துவரின் கண்காணிப்புடன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
டாக்டர்.தங்க ப்ரஜின்
தொகுப்பு அனுஷா
Tags: News