கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பற்களுக்கான சிகிச்சையை மேற்கொள்ளலாமா?
Posted on 30/05/2022
இன்றைய தேதியில் உலக அளவில் மக்கள் தொகையில் சரிபாதி மக்களுக்கு வாய் சுகாதாரம் மற்றும் பற்களுக்கான பாரிய பிரச்சனைகள் உள்ளது. அதிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் எப்போது பற்களுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்? என்ற சந்தேகமும் இருக்கிறது. இதற்கான விளக்கத்தை மருத்துவர்கள் பின்வருமாறு தருகிறார்கள்.
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், தங்களது பாதிக்கப்பட்ட பல்லையோ அல்லது பற்களையோ சத்திர சிகிச்சை மூலம் அகற்றிக் கொள்ளலாமா? என்றும், அதனை எப்போது அகற்றிக் கொண்டால் பக்கவிளைவுகளை தராமல் இருக்கும் என்பது குறித்தும் பல்வேறு வினாக்களை மருத்துவர்களிடத்தில் எழுப்பி வருகிறார்கள். கொரோனா தொற்று பாதித்தவர்கள், பாதிப்பிலிருந்து குணமடைந்து மூன்று மாதத்திற்கு பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் இரண்டு தடவை தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு, பாதிக்கப்பட்ட பல்லை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சையை மேற்கொள்ளலாம். இதற்குள் சிலருக்கு வலி தாங்க இயலாத நிலை இருந்தால், முழுமையான நிவாரண சிகிச்சை பெறலாம். அதே தருணத்தில் சொத்தைப்பல் பிரச்சனை உள்ளவர்கள் உடலியக்க இணை நோய்களான நீரிழிவு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு, இதயம் தொடர்பான இடையூறுகள் போன்றவை இருந்தால், இதனை பல் மருத்துவரிடம் நிபுணரிடம் தெளிவாக தெரிவிக்க வேண்டும். அவர்கள் இதற்கு ஏற்றவகையில் சிகிச்சையை வழங்குவார்கள். சிலருக்கு பற்களை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சையை மேற்கொண்ட பிறகு, மருத்துவரின் பரிந்துரை பெற்றுக்கொண்டு கொரோனாத் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.
அதே தருணத்தில் வாய் சுகாதாரத்தை அடிக்கடி துல்லியமாக மேற்கொள்ள வேண்டும். பல் வலி, ஈறு வலி என வாய் பகுதியை சார்ந்த வலிகள் வரும்வரை காத்திருக்காமல், வாய்ப் பகுதியில் ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால், உடனடியாக பல் மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கும், பற்களுக்கான சத்திர சிகிச்சைக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை என்பதையும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
டாக்டர். சீனிவாஸ்
தொகுப்பு: அனுஷா
Tags: News