டிஜிட்டல் திரை காரணமாக சிறார்களுக்கான பார்வைத்திறன் பாதிப்பு அதிகரித்திருக்கிறதா..?
Posted on 05/05/2022
ஸ்மார்ட்போன் மற்றும் டிஜிட்டல் திரை ஆகியவற்றை 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் தொடர்ந்து பார்வையிடுவதால் அவர்களுக்கு மாறுகண் மற்றும் கிட்டப்பார்வை போன்ற பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது என கண் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக கண் மருத்துவ நிபுணர் திருமதி மஞ்சுளா பேசுகையில்,' கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மாறுகண் மற்றும் கிட்டப்பார்வை போன்ற பாதிப்புகள் வழக்கமான அளவை விட 25 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் மாணவ மாணவிகள், கல்வி சார்ந்த செயற்பாட்டிற்காக ஸ்மார்ட் போன், டேப்லெட், ஐ பேட் போன்றவற்றை மிக அருகில் வைத்து, நீண்ட நேரம் இடைவெளியின்றி தொடர்ச்சியாக காண்கின்றனர். இதனால் கண்களுக்கு இயல்பான அளவை விட கூடுதலாக அழுத்தம்,ஏற்படுகிறது. இதன் காரணமாக கண்களை சுருக்கி பார்க்க வேண்டிய நிலை உருவாகிறது. இது கிட்டப்பார்வை பாதிப்பை தூண்டுகிறது. அதிக வெளிச்சத்தை அளிக்கும் டிஜிட்டல் சாதனங்களாலும் கிட்டப்பார்வை பாதிப்பு ஏற்படுகிறது. அத்துடன் இதனை தொடர்ச்சியாக பார்வையிடுவதால் வறண்ட கண் பாதிப்பையும் உண்டாக்குகிறது.
இந்நிலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கி பயன்படுத்த அறிவுறுத்துவதை விட, மடிக்கணினி, கணினி போன்றவற்றை வாங்கி தந்து, அதனை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான பயிற்சியையும் அளிக்க வேண்டும். ஏனெனில் ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் கணினி திரைகளுக்கும், அதனை பார்வையிடும் கண்களுக்குமான தூரம் அதிகமாக இருக்கும்.
மேலும் உங்களது குழந்தைகளை நாளாந்தம் ஒரு மணி நேரமாவது சூரிய ஒளி படும் வகையில் விளையாட அனுமதிக்க வேண்டும் அல்லது அதற்கேற்ற சூழலை உருவாக்கித்தர வேண்டும். ஏனைய ஊட்டச்சத்துக்களுடன் விற்றமின் ஏ சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களையும் உணவுடன் இணைந்து வழங்க வேண்டும். கிட்டப்பார்வை பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தற்போது புதிய மருந்துகள் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் இத்தகைய பாதிப்புகளுக்குரிய நவீன சிகிச்சைகளும் அறிமுகமாகியுள்ளன. மாறு கண் பார்வைக்கான புதிய சத்திர சிகிச்சையும் அறிமுகமாகி பலனை அளித்து வருகிறது.' என்றார்.
தொகுப்பு: அனுஷா
Tags: News